×

புதுவையில் குழப்பம் சாமியிடம் அருள் வாக்கு கேட்ட சாமி

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில், புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதனால் வேட்பாளர் தேர்வு விஷயத்தில் தேஜ கூட்டணி தலைவரான ரங்கசாமியின் முடிவுக்கு பாஜ காத்திருக்கிறது. முன்னாள் என்.ஆர்.காங்கிரஸ் எம்பி ராதாகிருஷ்ணன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வருகிறது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக காலியாக உள்ள அமைச்சர் பதவியை நிரப்புவதற்கும் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். இது போன்று சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாக முதல்வர் ரங்கசாமி தனது ஆன்மீக குருவான சேலம் அப்பா பைத்தியம்சாமி மற்றும் பொள்ளாச்சி அழுக்கு சாமியார் ஆகியோரை தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி தேஜ கூட்டணி வேட்பாளர் தேர்வு, புதிய அமைச்சர் நியமனம் ஆகியவற்றுக்கு நேற்று காலை சேலம் அப்பா பைத்தியம்சாமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி அருள் வாக்கு கேட்க சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வேட்டைக்காரன் புதூரில் உள்ள அழுக்கு சாமியார் கோயிலுக்கும் சென்று சாமி கும்பிட்டார். இதனால் விரைவில் வேட்பாளர் மற்றும் புதிய அமைச்சர் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தேஜ கூட்டணி வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயத்தையும், டிஸ்மிஸ் செய்யப்பட்ட சந்திரபிரியங்காவுக்கு பதிலாக காரைக்கால் எம்எல்ஏ திருமுருகன் அமைச்சராகவும் நியமித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

The post புதுவையில் குழப்பம் சாமியிடம் அருள் வாக்கு கேட்ட சாமி appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Sami ,Puducherry ,Teja alliance ,Rangasamy ,
× RELATED வெயில் படுத்தும் பாடு… ஏடிஎம் ஏசி அறையில் தூங்கிய போதை ஆசாமி